முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை , சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இராணுவ சேவை
இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டிராக்டருடன் குறித்த நபர் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ சேவையிலிருந்து தப்பியோடியவர் (AWOL) எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த இவர், டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். தப்பியோடிய மற்றொரு நபர் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, அங்கிருந்த மற்றொரு நபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோத வலை இழுக்கும் தொழிலில் நேரடியாகத் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை முல்லைத்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |