மங்கள ஒரு நேர்மையான அரசியல்வாதி - சபையில் சஜித் புகழாரம்
ஜனநாயகத்துக்காக போராடிய - களமாடிய பண்புமிக்க அரசியல்வாதியே மறைந்த முனனாள் அமைச்சர் மங்கள சமரவீர (Mangala Samaraweera) என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அமரர். மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
என்னை அரச தலைவர் வேட்பாளராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர்தான் மங்கள சமரவீர. எனக்கு ஆதரவு தெரிவித்து ஹரின் பெர்னாண்டோ பதுளையில் முதலாவது கூட்டத்தை நடத்தினார்.
மாத்தறையில் மங்கள இரண்டாவது கூட்டத்தை நடத்தினார். மங்கள, எப்போதும் சரியான பக்கத்திலேயே நிற்பார். ஜனநாயகத்துக்காக துணிந்து போராடுவார்.
ஜனநாயகத்தை வெற்றிபெற வைக்க தன்னை அர்ப்பணித்து செயற்படுவார். சர்வதேசத்தின் ஆதரவை வென்றவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.