மது போதையில் வீட்டிற்குள் நுழைந்த கும்பலின் கண்மூடித்தனமான அராஜகம்- சுய நினைவை இழந்துள்ள குடும்பஸ்தர்!
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் வயது-44 என்பவர் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக படு காயம் அடைந்த அவர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டில் வசிக்கும் 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும்,15 வயதுடைய மாணவி ஒருவரையும் தாக்கியுள்ளதுடன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் காரணமாக வீட்டில் உள்ள இரு குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீடு கடுமையான தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. நேற்றைய தினம் இரவு அப்பகுதிக்குச் சென்ற அடம்பன் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ள தோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் என்ற குடும்பஸ்தர் சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.