மன்னாரில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீர சிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன பிரசாத் ஜயதிலகவின் ஆலோசனைக்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து பொறுப்பதிகாரி மாறசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியாளவில் கண்காணிப்பு நடவடிக்கை இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலப்பகுதியில் பயணிக்கும் வகனங்கள் மேற்படி கண்காணிப்பு நடவடிக்கையின் போது முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன் வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளும் பொலிஸாரினால் அடையாளப்பட்டுத்தப்பட்டது.
அதே நேரத்தில் வாகனங்களில் தேவைக்கு அதிகமாக பொருத்தப்பட்ட அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை அகற்றுமாறு வாகன உரிமையாளர்களுக்கு பணிக்கப்படதுடன் பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன பரீட்சகரினால் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை 10 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.
மேற்படி போக்குவரத்து கண்கானிப்பு நடவடிக்கைகளின் போது அடையாளப்பட்டுத்தப்பட்ட குறைபாடுகளை குறித்த காலப்பகுதியினுள் வாகன உரிமையாளர் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

