மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கிச் சூடு : இருவர் அதிரடி கைது
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மற்றும் அதற்கு உதவியளித்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த போது நேற்று (28) இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களிடமிருந்து இயங்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கமைய, மன்னார் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவும் மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மன்னார் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |