கூட்டமைப்பாக இணைந்து உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவோம்!
மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி சார்பாக இன்றைய தினம் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்தல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலுக்காக குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுடன் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் சென்றிருந்தனர்.
கட்டுப் பணம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக மன்னார் மாவட்டம் சார்பாக இன்று புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தி உள்ளோம். தமிழரசு கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதன் பிரதான நோக்கமானது 2018 ஆம் ஆண்டு தேர்தல் முறைமை காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாத்திரம் தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட நகர சபை
தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. உதாரணமாக மன்னார் நகர சபையில் ஒரு வட்டரத்தை தவிர மிகுதி வட்டாரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.
ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டு வேறு கட்சியை சேர்ந்தவர்களை அழைத்தே நாங்கள் ஆட்சி அமைத்தோம்.
கூட்டமைப்பே கைப்பற்றும்
அதன் காரணமாகவே தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவதாகவும், வெற்றி பெற்று வருகின்ற உறுப்பினர்கள் ஒன்றாக ஆட்சியமைப்பதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கதைத்தோம். அதனடிப்படையில் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று கட்சிகள் சார்பாக போட்டியிட்டால் குறித்த மூன்று கட்சி சார்பாகவும் வாக்களிக்குமாறு தெரிவிப்போம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
