ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம்
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்திற்கு எதிராகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராகவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு மருதானை பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை இடம்பெற்றது.
ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வாழ்க்கைச் செலவீனத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
குறிப்பாக விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால், நாடெங்கிலும் அந்த எண்ணெய் புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே விஷத்துடன் சேர்த்த புத்தாண்டையே அரசாங்கத்தை அமைக்க வாக்களித்த 69 இலட்ச மக்களும் கொண்டாட வேண்டி இருக்கின்றது என்றும் இதன்போது தெரிவித்தனர்.
முறையற்ற பொருளாதார நிர்வாகம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மோசடிகள் நிறைந்த அரசாங்கம் என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் காணப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.