அடுத்தவாரம் முதல் பிரான்சில் புதிய நடைமுறை
பிரான்சில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (16) பொதுப் போக்குவரத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசங்களை கட்டாயமாக அணியவேண்டிய விதி முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது.
எனினும் விரும்பினால் முக கவசங்களை அணியும் நிலை பரிந்துரைக்கப்படுவதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் நேற்று அறிவித்துள்ளார்.
பிரான்சில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படவுள்ள நிலையில், நேற்று அரச தலைவர் இமானுவேல் மக்ரன் தலைமையில் நடத்தப்பட்ட இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறைப்படி எதிர்வரும் திங்கட்கிழமை (மே - 16) முதல், அனைத்து வகையான பொதுப்போக்குவரத்து தடங்களில் இதுவரை இருந்த கட்டாய முக கவச விதி முடிவுக்கு வரவுள்ளது.
இதனால் இனிமேல் பாரிஸ் உட்பட்ட நகரங்களில் பேருந்துகள் அல்லது நிலக்கீழ் தொடருந்து தடங்களில் முக கவசங்களை அணியவேண்டிய அவசியமில்லை.
பிரான்சில் சுகாதார நிலைமை மேம்பட்டு வருவதால், இந்தக் கட்டுப்பாடு இனி பொருத்தமற்றதென சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.