சரியான முடிவுகளை எடுத்தால் 2023 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலாம்! ரணில் ஆரூடம்
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான முடிவுகளை எடுத்தால், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பழைய அரசியலில் இருந்து விடுப்பட்டு புதிய பயணத்திற்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான தேசிய ஊழியர் சங்கம் இன்று ஒழுங்கு செய்திருந்த மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் இளைஞர்களின் மாத்திரமல்லாது அனைவரது எதிர்காலமும் இல்லாமல் போயுள்ளது. இலங்கை தற்போது அராஜக நிலைமைக்குள் சென்றுள்ளதுடன் அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும், மகிந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷமே அனைத்து இடங்களிலும் கேட்கின்றது. அரசாங்கத்திற்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.
அது கட்சியின் அணியினருக்கும் சகோதரர்களுக்கும் இடையிலான போராட்டம். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், 21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது.
20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை, 21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம் என்றார்.
