இணைய ஊடகத்தின் செய்திக்கு பருத்தித்துறை நகரபித்தா கண்டனம்!
இணைய ஊடகத்தினால் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டமை தொடர்பில் பருத்தித்துறை நகரசபையின் நகரபிதா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டவிரோத மரக்கடத்தல்
“நேற்றைய தினம் (05.05.2026) தென்மராட்சிப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலுடன் கைப்பற்றப்பட்ட வாகனம், என்னுடைய புகைப்படத்துடன் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இன்று 06.05.2026ம் திகதி, நண்பகல் 12.10 மணிவரை குறித்த செய்தியை பார்வையிடக்கூடியதாக உள்ளது.
குறித்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உடலானது (Body) எனது குடும்ப நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தில் இருந்து கழற்றி, பிறிதொரு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளமையை அறியமுடிகிறது.
எனக்கோ எனது வர்த்தக நிறுவனத்திற்கோ குறித்த வாகனத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.
என்னுடன் தொடர்புபடுத்தி வெளியிடப்படும் இந்த போலியான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை நான் திட்டவட்டமாக மறுப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உண்மைக்குப் புறம்பான செய்தி
மேலும், இச்செய்திகளை வெளியிட்டவர்களின் நோக்கம் எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது மட்டுமே என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

நீண்டகாலமாக மக்கள் நலப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடும் எமது செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ளாத குறித்த ஊடகமும், அதனோடு இணைந்து செயற்படுவோரும் பல்வேறு வழிகளில் எமது செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த, முட்டுக்கட்டை போட தொடர்ந்தும் முனைகின்றனர்.
எனினும், போலியான, உண்மைக்குப் புறம்பான குறித்த செய்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும்.
அவ்வாறு செய்யத்தவறும்பட்சத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள பொறிமுறைகளைப் பயன்படுத்தி அதற்கான தீர்வினைப் பெற முயற்சிப்பேன் என்பதையும் உறுதிபடக் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |