கைதுகளால் அதிரும் சிறைச்சாலைகள் திணைக்களம் - தொடரும் பதவி விலகல்கள்
புதிய இணைப்பு
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதியொருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவி விலகுவதாக தெரிவித்து பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிகளில் பல மாற்றங்கள்
இதற்கிடையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்களின் பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதி அமைச்சின் கூடுதல் செயலாளர் நிஷான் தனசிங்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்க நியமிக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு
இதேவேளை, சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பொது மன்னிப்பு மூலம் விடுதலை பெற்ற அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்க உதவியவர் என்ற கருத்து அந்தப் பகுதியில் நிலவுவதாக அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, இந்த முறை பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து அந்தப் பகுதி மக்களிடையே பலத்த சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விட்டு, அரசாங்கம் அதிலிருந்து கை துடைத்துக் கொள்ள முடியாது என ரோஹண பண்டார கூறியுள்ளார்.
அதன்படி, மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை சரிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
