கிண்ணியா வைத்தியசாலையில் மருத்துவ அலட்சியம்! வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு சிக்கல்
கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ அலட்சியப்போக்கு தொடர்பில் முகநூல் வாயிலாக வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் கடிதம் ஒன்றின் மூலம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த முறைப்பாட்டில் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் “3 வயது பிள்ளையின் இடக்காலில் ஏற்பட்ட முறிவுக்கு வலக்காலில POP போட்டு வைத்தியர் சாதனை கிண்ணியா வைத்தியசாலையில் சம்பவம்” என சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்பி குறித்த ஊடகவியலாளர் அபகீர்த்தியை ஏற்படுத்துகிறார் எனவும், எனவே இவரை தீர விசாரித்து இவரின் நோக்கம், இதற்கு பின்னால் உள்ள சக்திகள் பற்றி விளக்கத்தைப் பெற்று தமக்கு நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 04.04.2026 அன்று கிண்ணியாவில் வசிக்கும் தம்பதியினர் 3 வயது குழந்தையுடன் பாலையூற்றில் வசிக்கும் பெண்ணின் தாயை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
வைத்திய அதிகாரிகளின் அலட்சியம்
இதன்போது மோட்டார் சைக்கிள் சீனக்குடா பகுதியில் விபத்துக்குள்ளாகி தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது தாய் சுய நினைவற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தந்தைக்கும், குழந்தைக்கும் சிகிச்சை நடைபெறுகிறது. இதன்போது 3 வயதான குழந்தையின் இடக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக எக்ஸ்ரே அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
மறுநாள் குறித்த குழந்தையின் இடக்காலில் ஏற்பட்ட முறிவுக்கு வலக்காலில் கட்டுப்போட்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு குழந்தை நோய்காவு வண்டியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விரிவான விசாரணைக்கு கோரிக்கை
அங்கு விபத்துச் சேவைப்பிரிவில் அன்று கடமையில் இருந்த சுகாதார உத்தியோகத்தர்களினால் முறிவு ஏற்படாத காலில் மாறி கட்டுப் போட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுடைய தவறுகளை குழந்தையின் அம்மம்மாவின் முன்னே சுட்டிக்காட்டி கிண்ணியா வைத்தியசாலைக்கும் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி குறித்த உத்தியோகத்தர்கள் கதைக்கின்றார்கள். பின்னர் முறிவு ஏற்பட்ட சரியான காலுக்கு POP போடப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த தவறை மேற்கொண்ட கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு வருகை தந்து தங்களுடைய தவறுக்காக பாதிக்கப்பட்ட குழந்தையின் அம்மம்மாவிடம் மன்னிப்புக் கேட்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறானதொருபின்னணியில், இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த மருத்துவ அலட்சியப்போக்கு சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டு தவறிழைத்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சிறந்த, சரியான சிகிச்சை கிடைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்