சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று(31) காலை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வது குறித்தும், சில நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார அமைச்சு செயற்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கலந்துரையாடுவதற்கான சந்தர்பம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் பொறுப்புநிலை வாய்ந்த ஒருவரைச் சந்தித்து இது தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டாலும், அந்த நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் பிரதம நிறைவேற்று அதிகாரியோ அல்லது தவிசாளரோ இல்லாததால், அதற்கான வாய்ப்பைப் பெற முடியாது போனது.
எவ்வாறாயினும்,குறித்த தருணத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.