மே 18 இல் யாரை நினைவு கூர்ந்தீர்கள்? வீடு தேடிச்சென்ற கட்டளை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான மே 18 ஆம் திகதி, வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்ற விபரங்களை வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதியிடம் சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தவர்மன் எனப்படும் செல்வநாயகம் அரவிந்தன் என்ற முன்னாள் அரசியல் கைதிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கட்டளையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டளையில், கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இனப்படுகொலையை நினைவுகூரும் தினத்தன்று, யுத்தத்தில் மரணித்த தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதாக வாக்குமூலம் வழங்கியிருந்தீர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வாக்கு மூலத்தின் போது யுத்தத்தில் மரணித்த குடும்பத்தினரதும், உறவினர்களினதும் விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கையளிப்பேன் எனவும் கூறியிருந்தீர்கள் எனவும் அந்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பதாக வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மரணித்தவர்களின் முழு விபரங்களையும் கையளிக்குமாறு தகவல் தருகின்றோம் என குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதி குறித்த முன்னாள் அரசியல் கைதி தனது வீட்டில் இறந்தவர்கள் நினைவாக நீதிமன்ற கட்டளைகளை மீறாத வகையில் அஞ்சலி செலுத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் இவ்வாறான நடவடிக்கை, தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதுடன், அவர்களின் நினைவேந்தலுக்கான உரிமையை மறுக்கும் செயற்பாடு என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.