4 வயது மகனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தைக்கு நேர்ந்த கதி
4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தாயாருக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஊவா பரணகம காவல் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (20) மாலை 5:30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுபோக உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதவான் நீதிமன்றில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் குழந்தையை அடிக்கும் காட்சியை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் இந்த காணொளியை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தை காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |