பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை
மறைந்த உலகப்புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மைக்கேல் ஜாக்சனின் நீண்ட கால நண்பர்களான எட்வர்ட், டொமினிக் மற்றும் ஆல்டோ காசியோ (Cascio) ஆகிய மூன்று சகோதரர்களும் அவர்களது சகோதரி மேரி-நிகோல் போர்டே ஆகியோரே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் வன்கொடுமை
பல வருடங்களுக்கு மேலாக மைக்கேல் ஜாக்சன் தங்களுக்குப் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமைகளைச் செய்ததாக அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் அடிக்கடி தங்கும் ஹோட்டல் ஒன்றில் இவர்களது தந்தை பணியாற்றிய போதே அவருடன் இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டுகளை மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் தரப்பு வன்மையாக மறுத்துள்ளது.
கோடிக்கணக்கான டொலர்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மார்ட்டின் சிங்கர், ஜாக்சனின் எஸ்டேட்டிலிருந்து கோடிக்கணக்கான டொலர்களைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு நம்பிக்கையற்ற முயற்சி இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இதே நபர்கள் ஜாக்சன் தங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என்று கூறியிருந்த முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், 2019-ஆம் ஆண்டு வெளியான லீவிங் நெவர்லேண்ட் (Leaving Neverland) ஆவணப்படத்தைப் பார்த்த பின்னரே ஜாக்சனின் செயல்கள் எவ்வளவு தவறானவை என்பதையும் அவை தங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன என்பதையும் உணர்ந்ததாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து மைக்கேல் ஜாக்சன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்து 17 ஆண்டுகள் நெருங்கும் சூழலில் மீண்டும் எழுந்துள்ள இந்த வழக்கு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |