“தமிழர் பகுதியில் இராணுவ ஆட்சி” நாட்டுக்கே அபகீர்த்தி என்கிறது எதிரணி
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்தார்.
மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் இராணுவ ஆட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.
வடக்கில் மக்களை மட்டுமல்ல ஊடகவியலாளரையும் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். சிலர் கைதுசெய்யப்படும் உள்ளனர்.
இந்த அராஜக நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றோம்.
இறந்தவர்களை நினைவேந்த அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இன, மத, மொழி வேறுபாடு காட்டக்கூடாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.