அற்ப அரசியலுக்கு ஆசையில்லை இது இளைஞர் தலைமுறைக்கான களம் - சம்பிக்க ரணவக்க
அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என 43ஆவது கட்டளை பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தாம் அற்ப அரசியல் செய்வதில்லை எனத் தெரிவித்த உறுப்பினர், இந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகளை வகிக்கவோ அல்லது அரச அதிகாரத்துடன் இணைவதற்கோ தனக்கு எந்தத் திட்டமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (18) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இளைஞர் தலைமுறை அரசியல்

“சிறிலங்கா அரசியலுக்குத் தேவையான புதிய சக்திவாய்ந்த அரசியல் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு தன்னை அர்ப்பணித்தேன்.
இந்த நேரத்தில் இளம் தலைமுறையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சக்தி நாட்டுக்குத் தேவை.
பல்வேறு குழுக்களின் கூட்டணி என்பது நல்ல விடயம்.இது இந்த வேளையில் நாட்டிற்கு தேவையான ஒரு மாற்றாகும். இன்று நாடு எதிர்நோக்கும் போராட்டமும் வங்குரோத்து நிலையும் இளைஞர் தலைமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காவல்துறை அரசையும் அடக்குமுறையையும் தடுத்து நிறுத்தி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலில் எவரும் போட்டியிடக்கூடிய வகையில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வி இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.