கோட்டாபயவுக்கு அதிகாரம் உண்டு! ஆனால் இதுதீர்வல்ல - பங்காளிக்கட்சி எடுத்துரைப்பு
அமைச்சர்களை மாற்றியமைப்பதன் ஊடாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொள்ள சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அமைச்சர்களை நியமிக்கவும் பதவி நீக்குவதற்கும் அரச தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. அரச தலைவர் வேண்டும் என்றால் என்னையும் பதவி நீக்க முடியும்.
அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவருவதினாலோ அல்லது அமைச்சர்களை மாற்றுவதினாலோ பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டமுடியாது. அமைச்சர்களை மாற்றுவது, நீக்குவது என்பது அரசியல் ரீதியான நடவடிக்கை.
புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் எந்தவித தீர்மானம் இல்லை. தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.