எமது பிள்ளைகள் எங்கே - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒன்றிணைந்து பேசுங்கள்!
தமிழ் கட்சிகள் ஒன்றாக சிறிலங்கா அதிபரை சந்திக்கும் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவும் கதையுங்கள். எமது உறவுகள், பிள்ளைகள் இருக்கிறார்களா?இல்லையா? என்ன நடந்தது என்று கேளுங்கள்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அதிபருடன் கதைத்தால் மாத்திரமே தீர்வு ஒன்று கிடைக்கும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து மக்களுக்கு வழங்கினர்.
பள்ளிமுனை பங்கு தந்தை, உதவி பங்குத்தந்தை பொதுமக்கள், இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு, கஞ்சியை அருந்தினர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் வகையில், நாங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வருகின்றோம். வருடா வருடம் இதனை செய்து வருகின்றோம். இதனை உப்பு இல்லா வெறும் கஞ்சி என்று ஒருவரும் நினைக்க வேண்டாம். எமது மக்கள் பட்ட துன்பம் துயரம் கலந்த உணவாக காணப்படுகின்றது.
இந்த கஞ்சியை பெற்றுக்கொள்ள மக்கள் எவ்வளவு தூரத்தில் நின்றதை நினைவு கூர வேண்டி உள்ளது. அதன் வலி எமது மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. வலி நிறைந்த கஞ்சி இது. மேலும் அதிபரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்து உள்ளனர்.
அவர்களிடம் நாங்கள் பல தடவை கோரியிருந்தோம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் குறித்து கதைக்குமாறு. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம்.
கூட்டாக பேசினாலே தீர்வு
நாங்கள் வீதியில் நிற்கின்ற அம்மாக்கள் இல்லை. காணமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவும், உறவுகளுக்காகவுமே போராடி வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அம்மாக்கள் இன்று 2 ஆயிரம் நாட்களுக்கு மேல் வீதியில் நிற்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அதிபருடன் கதையுங்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அதிபருடன் கதைத்தால் மாத்திரமே தீர்வு ஒன்று கிடைக்கும். எத்தனையோ தேவைகளுக்கு எல்லாம் அதிபரை சந்தித்து கதைக்கின்றீர்கள்.
ஆனால் ஏன் வலிந்து காணாமல் போன எமது உறவுகளுக்காக கதைக்கின்றீர்கள் இல்லை? அதிபருடன் பேசுமாறு நாங்கள் எத்தனையோ தடவை உங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போதும் நாங்கள் உங்களிடம் கூட்டாக வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழ் கட்சிகள் ஒன்றாக அதிபரை சந்திக்கும் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவும் கதையுங்கள். எமது உறவுகள், பிள்ளைகள் இருக்கிறார்களா?இல்லையா? என்ன நடந்தது என்று கேளுங்கள்.
ஏற்கனவே எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அதற்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.அதற்குள் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள். இவை எதுவும் அரசாங்கத்திற்கு தெரியாமல் நடக்காது.
அரசுக்கு தெரிந்து கொண்டே கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.இதனை எல்லாம் ஏன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் தமிழ் கட்சிகள் கேட்கக்கூடாது? இவ்வாறான பிரச்சினைகள் குறித்து கதைக்குமாறே தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.










