அரசு விடுவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள் : OMPயிடம் கோரிக்கை
சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று (25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
பிரச்சினைகள் எதுவும் இல்லை
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில், ”ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது? அவர்களுடைய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் எமது நாட்டிற்கு தேவைப்படாது.

ஆனால், நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினான சர்வதேச தினத்தை OMP மற்றும் அரசாங்கம் இணைந்து கொண்டாடுவது என்பது, சர்வதேசத்திற்கு "நாங்கள் உள்நாட்டிலேயே தீர்வு பெற்றுக் கொடுத்துவிட்டோம். இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது" என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில் விடுவித்திருக்க வேண்டும்.
அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.
இந்த OMP என்பது எங்களுடைய மக்களிடையே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுகின்ற உறவுகளிடையே ஒரு தோல்வி அடைந்த ஒரு நெறிமுறையாக தான் அவர்கள் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்
நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து, நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை நீங்கள் எங்களிடம் ஒப்படையுங்கள். அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல் ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒத்துக் கொள்ளாமல், பிரச்சினையை மூடி மறைக்கப் பார்ப்பதற்கான இப்படிப்பட்ட ஒரு கண் துடைப்பான விஷயத்தை ஏற்படுத்துவதை நாங்கள் எப்போதும் இந்த காணாமல் போன சமூகம், அதாவது காணாமல் போன உறவுகளின் குடும்பத்தில் இருக்கும் ஆட்களின் சார்பில் நாங்கள் அதை நிராகரிக்கிறோம்.
எங்களது உலகளாவிய ரீதியில் இருக்கின்ற எங்களுடைய உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். காணாமல் போனோர் என்ற விடயம் நாங்கள் பத்திரிகைகளில் படிப்பதோடு அல்லது அம்மாக்களின் போராட்டம் வீதியில் நிற்பதோடு முடிந்துவிடவில்லை.
இங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில் சமூகங்கள் ஒவ்வொருவராக முயற்சி செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்- அவர்கள் எப்போது, எங்கு, யாரால், எந்தச் சூழ்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்ட புத்தகம் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் 300-க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் அடங்கியவாறு சிவில் சமூக அமைப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு
இந்தப் புத்தகத்திற்குள் இருக்கின்ற இந்தப் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி, வேதனை. அவர்களுடைய ரத்தமும் சதையுமாக பெற்றோர்களின் கண்ணீருக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய ஒவ்வொருத்தரின் கதை.
இது இங்கே இருக்கத்தக்கதாக, நீங்கள் நஷ்டஈடு கொடுக்கிறீர்கள். நீங்கள் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை கொண்டாடுகிறீர்கள். எங்களுக்கு தினங்களும் வேண்டாம், நஷ்டஈடும் வேண்டாம்! எங்களுக்கு எங்களுடைய பிள்ளைகளும், எங்களுடைய உறவுகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான பதில் எங்களுக்கு வேண்டும்.

சர்வதேச தினத்தை நீங்கள் அனுஷ்டிப்பதாக இருந்தால், நாங்கள் கோருகின்ற வெளிநாட்டுப் பொறிமுறையும், அதற்கான தனியான ஒரு நீதிமன்றமும், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையையும் நாங்கள் கோருகிறோம்.
அப்படி ஒரு கோரிக்கை விடுக்கின்ற நாங்கள், இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள். நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.
அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்“என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9