அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் - விசாரணையை ஆரம்பித்த CID
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'பஸ் லலித்' என அறியப்படும் சந்தேக நபர் சமீபத்தில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பஸ் லலித்' மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |