போட்டிக்காகவே பணம் அச்சடிக்கப்படுகிறது - ஆபத்தை நோக்கி நகரும் நாடு! சஜித் பிரேமதாச காட்டம் (படங்கள்)
அரசியலுக்காக தேசப்பற்றையும் எங்கள் சுதேச தனத்தையும் பௌத்தத்தையும் பிளவுபடுத்திய அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
போட்டிக்காக பணம் அச்சடிக்கப்படுகிறது. பணவீக்கம் உயர்வதற்கு விலைவாசி உயர்வுக்கும் பணம் அச்சடிப்பதும் ஒரு காரணமாகும். ஒரு சிறிய பொருளை வாங்க சிம்பாபேயிற்கு பணத்தை பில்பெரவில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- வெலிஓயாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அந்த அளவுக்கு பணம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுதான் உயர் பணவீக்கமாகும். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நம் நாடு ஆபத்தில் வீழ்ந்து விடும். நாட்டை கொண்டு நடத்த முடியவில்லை என்றால் இராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான அணிக்கு பொறுப்பை வழங்க வேண்டும்.
மக்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், அரசாங்கத்திற்குள் பல புதிய பிரச்சினைகள் அதிகம் உருவெடுத்துள்ளன. உர கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்த அரசாங்கத்திடம் பணம் உள்ளது. ஆனால் கொஞ்சம் பால் மா இறக்குமதி செய்ய பணம் இல்லை.
அரச தலைவர் தேர்தலின் பின்னர் கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அரசாங்க வருமானம் குறைந்தது. இலங்கையின் பொருளாதாரம் பலவீனமாக உள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கண்டறிந்து கொண்டன. இதனால் நமது நாடு வெளிநாட்டுக் கடன் சந்தையில் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியாது போயுள்ளது.
இல்லாத டொலரைக் கொண்டு வரவென இப்போது நம் நாட்டில் சொத்து ஏலத்தில் அரசாங்கம் வெள்ளையடிக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தெளிவான பொருளாதார கொள்கைகளுடன் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.