திடீர் பல்டி அடித்தார் பிரதமர் ரணில்
பணவீக்கத்தை தடுக்க பிரதமரின் தீர்மானம்
இலங்கையின் பணவீக்கத்தை தடுப்பதற்காக அடுத்தாண்டு தொடக்கம் பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் 21.5 சதவீதம், ஏப்ரலில் 33.8 சதவீதம் என பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனை நிவர்த்திக்கவென ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரணில் அளித்த பேட்டி
இது ஒருபுறமிருக்க அண்மையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் அளித்த பேட்டியில், ‘‘அரசிடமும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லை. புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்.
ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால்தான் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் மக்கள் இந்தப் பணத்தை உற்பத்திக்காக செலவு செய்ய வேண்டும். அதை விடுத்து நுகர்வுக்காக செலவிட்டால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.
அதன்பிறகு மீளவே முடியாத நிலைக்கு சென்று விடுவோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, 2 ஆண்டு கால நிவாரண திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தப் புதிய பட்ஜெட் இருக்கும்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பொருளாதார நிபுணர்களது எச்சரிக்கை
இதற்கு, “புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது என்பது மிகவும் தவறான முடிவு. புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் மேலும் பணவீக்கம் அதிகரிக்கும். மக்கள் கைகளில் ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும்பட்சத்தில், அவற்றின் விலை மேலும் மேலும் உயரும்’’ என்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.