சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை - உடன் வழங்கப்பட்ட பதில்
அடாவடி நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவர்களைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் காவல்துறை சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்றைய தினம்(22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்கு சாணக்கியனது பெயரைச் சொல்லி அங்கு சென்றவர்களுக்கும் பாரிய எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
மிகுந்த சந்தேகம்

இது தொடர்பில் பதிலளிக்கையில் சாணக்கியன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை, சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICCPR Act No 56 of 2007- INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS சட்டம் மூலம் இப் பிக்குவானது கைது செய்யப்பட வேண்டும்.
தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே. இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அப்பிக்கு சொல்வதைப் போன்று எமது மக்களின் இப்பிரச்சினைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.
மற்றைய குறிப்பாக, அரச சார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது” எ்னறார்.