பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரை 13 வருடங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2793 என சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்பு காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2473 என்பதோடு, 184 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏழு இடங்கள்
இதன்படி, “வோச் டோக் டீம்” உறுப்பினர் யுதன்ஜய விஜேரத்ன, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 13ஆம் திகதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கோரிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொதுச் செயலாளர் கட்டடத்தின் ஆறாவது மாடி, கொழும்பு 01, இல, 101, சைத்திய பூசா தடுப்பு நிலையம், தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம், இல, 149 கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05, புடானி கெபிடல் கட்டடம், வவுனியா காவல்துறை அலுவலக வளாகம், ஓமந்தை அரசமுறிப்பு தடுப்புக் காவல் நிலையம் எனும் ஏழு இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பயங்கரவாத விசாரணைப் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
220 இடங்கள்
பயங்கரவாத சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியில் தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் மனித உரிமை அமைப்புகள் பலமுறை வெளிப்படுத்தியிருந்தது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் மற்றும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் பல்வேறு துணை இராணுவக் குழுக்களால் நாடு முழுவதும் சுமார் 220 இடங்கள் சித்திரவதை இடங்களாக பராமரிக்கப்பட்டு வருவதனை வரைபடமாக வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
