மோசமடையும் இம்ரான் கானின் நிலைமை! அநுர அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரி்க்கை
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை தாக்கல் செய்த அவர், காவலில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நலன்பற்றி கவலைகளை வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான கோரிக்கை
இந்த நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தூதரக மற்றும் நாடாளுமன்ற வாயிலாக தொடர்பு கொண்டு, இம்ரான் கானுக்கு சுயாதீனமான மற்றும் போதுமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும், சட்டநடைமுறைகளும் சர்வதேச மனித உரிமை தரநிலைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு, அவரின் விடுதலை அல்லது உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென மனிதாபிமான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1992 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வெற்றியாளராக வழிநடத்திய விளையாட்டு வீரராக இம்ரான் கான் பரவலாக அறியப்படுகிறார்.
கிரிக்கெட் சாதனைகள்
அவரது கிரிக்கெட் சாதனைகள் அரசியல் எல்லைகளைத் தாண்டி, இலங்கை உள்ளிட்ட பல கிரிக்கெட் நாடுகளுடன் நல்லிணக்கத்தை உருவாக்கியதாகவும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் மற்றும் விளையாட்டு தூதரகத் துறையில் அவர் வழங்கிய பங்களிப்பை மதித்து, இலங்கை மக்களின் குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களின் நல்லெண்ணத்தையும் உணர்வுகளையும் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தெரிவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை உடனடி பதில் வழங்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |