அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை: பெருமை பேசுகிறது - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் பெண்களும், நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பணிப்பெண்களும் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நாம் மகளிர் தொடர்பான யோசனைகளை முன்வைத்த போது அதற்கு எதிராக கூச்சலிடப்பட்டது.
ஆனால் இன்று பெண்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பேசுவதற்குக் கூட ஒரு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. ஆடை தொழிற்சாலை மூலம் நாட்டுக்கு கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொடுப்பது பெண்களாவர்.
கொரோனா தொற்று பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஏற்படுத்திக் கொடுக்கும் பெண்களை அழைத்து வருவதற்கு கூட அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் இரண்டாம் அலையின் பின்னர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது ஆனால் அவை வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எமது ஜனாதிபதி வேட்பாளர் கருத்து தெரிவித்த போது அதனைப் பற்றி பேச ஆண்களுக்கு உரிமையில்லை என்று கூறினார்கள். 40 000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் 30 000 பேர் குணமடைந்துவிட்டனர் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் 40 000 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று யாரும் கூறுவதில்லை.
பெண்களுக்கான அமைச்சொன்றைக் கூட வழங்க முடியாத அரசாங்கத்தின் ஆட்சியில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.