இராணுவ பாதுகாப்புடன் முல்லைத்தீவில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பம்
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியின் பயனாக முற்றுமுழுதாக இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொல்பொருள் திணைக்கள ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கிவைத்தார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.
அதனைத் தொடர்ந்து தமிழ் ஆராச்சியாளர்கள் எவரும் உள்வாங்கப்படாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பௌத்த வழிபாட்டு எச்சங்களே அங்கு காணப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
குருந்தூர்மலையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த நிலையில் அவ் ஆலய சூலம் ஏற்கனவே அகற்றபட்டிருந்தது.
கடந்த நான்கு மாதங்களாக ஆய்வுகள் எனும் பேரில் தமிழ் பத்திரிகையாகர்களுக்கும் கிராம மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஆய்வுகள் இராணுவம் ,தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக முற்றுமுழுதாக படையினரின் ஏற்பாட்டில் தமிழர்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான பிரித் ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராச்சி தொடங்கிய காலத்தில் இருந்து குருந்தூர் மலை முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவரப்பட்டு அனுமதி இன்றி தமிழர்கள் எவரும் செல்லாதவாறு படையினர் தடைவித்துவந்துள்ள நிலையில், நேற்று(10 ) இரவு நூற்றுக்கணக்கான படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் 30 பௌத்த துறவிகளின் பிரித் ஓதலுடன் பௌத்த சின்னம் நிறுவப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு குருந்தூர் மலை பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினரின் அனுமதிகள் எவையும் இன்றி சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தபட்டு இந்த பௌத்த விகாரை ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது.






