மாற்றித் தகனம் செய்யப்பட்ட சடலம்- சஞ்சலத்தில் உறவுகள்!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் இறந்த ஒருவரின் உடலத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் உடலத்தினை மாற்றிக்கொடுத்து அந்த உடலம் வவுனியா கொண்டு சென்று எரியூட்டப்பட்ட நிலையில் உடலத்தினை பெற வந்த உறவினர்கள் சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 22.08.2021 அன்று முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உயிரிழந்த 74 வயதுடைய முதியவரரான குமாரன் கோபாலன் என்பவரின் உடலத்தினை பிரோத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்காகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மாங்குளம் பொலிசாரின் உதவியுடன் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்கள்.
முறுகண்டியினை சேர்ந்த உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை என்ற பெறுபேறு நேற்று இரவே கிடைத்துள்ளது. இதற்கமைய மரணவிசாரணை அதிகாரியின் அனுமதியுடன் இன்று காலை உடலத்தினை கொண்டு செல்வதற்காக மாவட்ட மருத்துவமனையின் பிரோத அறைக்கு சென்றபோது அங்கு உயிரிழந்தவரின் உடலம் காணப்படாத நிலையில் உறவினர்கள் சஞ்சலமடைந்துள்ளார்கள்.
23.08.21 அன்று முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் பருவகால தொழில் நடவடிக்கைக்காக வந்த புத்தளத்தினை சேர்ந்த 65 அகரவயுடைய நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலத்திற்கு பதிலாக முறுகண்டி பகுதியினை சேர்ந்த 74 அகவையுடைவரின் உடலத்தினை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதால் அவரின் உடலத்தினை எரிப்பதற்காக 24.08.2021 அன்று வவுனியாவிற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ளனர்.
அங்கு உடலம் எரிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்றில் உயிரிழந்த நாயாற்றினை சேர்ந்த புத்தளம் வாசியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பிரோத அறையில் காணப்படும் நிலையில் அவரின் உறவினர்களால் முறுகண்டியினை சேர்ந்த இறந்தவரின் உடலத்தினை வவுனியா கொண்டு சென்று மின்தகன மேடையில் எரியூட்டப்பட்டதால் முறுகண்டியினை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடமும்,பொலிசாரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் எரித்த உடலினை மீண்டும் கொண்டுவர முடியாத நிலையில் இருதரப்பினரும் இணக்கப்பாட்டுக்கான பேச்சு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது


