முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலில் கைதாகிய இராணுவ சிப்பாய் மூவரும், குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.
அதனையடுத்து முறைப்பாட்டாளரின் சம்மதத்துடன் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி முன்னிலையில் குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ள நிலையிலேயே கடந்த 30 ஆம் திகதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் என் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது, மோட்டர் சைக்கிளில் இருந்தவாறே முள்ளிவாய்கால் பெயர் பலகையை ஒளிப்படம் எடுத்த என்னை நோக்கி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் ஒயா கௌத? (நீ யார்)என்று கேட்டார்.
நான் அதற்கு பதிலளிக்கும் முன்பே என்மீது தாக்குதலை தொடுத்தனர். அச்சந்தர்ப்பதில் சுதாகரித்து கொண்ட நான் குறித்த சிப்பாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒளிபதிவு செயதவாறே மோட்டர் சைக்கிளில் இருந்து பின்பக்கமாக இறங்கி பின்நகர்ந்தேன்.
குறித்த சிப்பாய் என்னை நோக்கி வந்தவாறே தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தி உரையாடிக்கொண்டு வந்தார். பின்னர் அவர் என்மீது தாக்குதலை தொடுத்த சந்தர்பத்தில் மேலும் இரண்டு சீருடை அணியாத இரு இராணுவ சிப்பாய்களும் சேர்ந்து, பச்சைமட்டை மற்றும் கைகளாலும் காலினாலும் தாக்குதலை தொடுத்தனர்.
என்மீது ஆரம்பத்தில் தாக்குதல் தொடுத்த முதலாவது இராணுவ சிப்பாய் தான் என்மீது தாக்கிய காட்சிகளின் ஆதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் எனது ஒளிப்பதிவு கருவியை பறிப்பதை நோக்கமாக கொண்டே உதவிகளுக்கு இரண்டு இராணுவ சிப்பாய்களை அழைத்து மீண்டும் என்மீது தாக்குதலை தொடுத்தார்.
கண்முடித்தனமாக என் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்ட போதும் எனது ஒளிப்பதிவு கருவியை நான் கைவிட மறுத்து பிடிவாதமாக நின்றதால். என் மீதான மல்லுக்கட்டலும் தாக்குலும், 20 நிமிடங்கள் தொடர்ந்தது இதன் விளைவாக அருகில் இருந்த முட்கம்பி வேலிக்குள் என்னை இராணுவ சிப்பாய்கள் சிக்க வைத்தனர்.
முட்கம்பியில் தாக்கியும் கீறியும் குத்தியதால் அதிகளவு இரத்தபெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றேன். குறித்த சம்பவம் தொடர்பில் 30-11-2021 முல்லைத்தீவு காவல் நிலையத்தால் இடம்பெற்ற விசாரணையில், சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.