ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவுடன் சென்ற காவல்துறை- மகன் கொடுத்த பதிலடி!
தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு காவல்துறை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.
அதனடிப்படையில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த தடையுத்தரவில் முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு காவல்துறை அறிக்கை செய்துள்ளனர்.
எனவே நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன் எனக் குறித்த நீதிமன்றத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி காவல்துறையை திரும்பி அனுப்பியுள்ளார்.