வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
மட்டக்களப்பு - பட்டிருப்பு பாலத்தருப் பகுதியில் இன்று (15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட கஞ்சி சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தாயக உறவுகள், உணவுப் பற்றாக்குறையால் கடும் அவதிக்குள்ளாகினர். அந்நேரத்தில் உப்புக்கூட இல்லாத சூழலில் தங்களிடம் இருந்த அசிரியையும் குறைந்தளவு பொருட்களையும் பயன்படுத்தி கஞ்சி காய்ச்சி பசியை போக்கிக் கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அந்த துயரமான காலத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலப்பகுதியில் வடகிழக்கின் பல பகுதிகளில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு பாலத்தருப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தி அந்நாளின் துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் அமைதியான சூழலில் நிகழ்வு நடைபெற்றதுடன், யுத்தத்தின் வேதனைகளை மறவாமை மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது அவசியம் என கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
பள்ளிக்குடியிருப்பு
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. என் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, "உயிர்காத்திட உதிரம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் குருதி தான முகாம் இன்று (15) திருகோணமலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை, திருக்கடலூர் ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய மண்டபத்தில் இன்று காலை இந்த நிகழ்வு ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், மற்றுமொரு உயிரைக் காக்கும் உன்னத நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் வருகை தந்து ஆர்வத்துடன் குருதி தானம் வழங்கினர். திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இந்த முகாமிற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


