முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உடைத்தது யார்? இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் தற்போது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை. நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது. இது விடயத்தில் இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம் என்றார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொது நினைவு தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், இதற்கும் இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.