தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம்
தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த மே 18 ஆம் திகதி தமிழ் இனவழிப்பு நினைவு நாளை முன்னிட்டு ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த செய்தியை தவறான முறையில் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம் என்றும், கடல் கடந்து வாழும் தமிழ் உறவுகளின் உரிமைகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் முதலமைச்சர் விஜய் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை
இந்தச் செய்தியை இலக்கு வைத்து வட இந்திய ஊடகங்கள் சில விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், கடந்த மே 21 ஆம் திகதி வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜயின் செய்தி என்பது 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில் ஈழத் தமிழர்கள் அனுபவித்த துயரங்களைப் பிரதிபலிக்கும் ஒரு மனிதாபிமான வெளிப்பாடே தவிர, தீவிரவாதத்திற்கான ஆதரவு அல்ல.

ஆனால், சில ஊடக நிறுவனங்கள் இந்தச் செய்தியைத் திரிபுபடுத்தி, தமிழர்களின் இன அடையாளத்தையும் மனிதநேயத்தையும் தீவிரவாத அரசியலாகக் காட்ட முற்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் என்பது வெறும் ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் பேரவலம். போரின் இறுதி மாதங்களில் நிகழ்ந்த பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |