வட்டுக்கோட்டை இளைஞனின் கொலை! தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் வழக்குடன் தொடர்புடையதாக கருதப்படும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மீள் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமை எத்தனை அலெக்ஸ்களை உருவாக்க திட்டம் என சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை காவல் நிலையம்
“வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற இளைஞன் சில வருடங்களுக்கு முன்பு காவலில் வைத்து சித்திரவதைக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார்.

அது ஒரு கொலை என்று குடும்பஸ்தவர்களும் நாங்களும் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துரையினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
ஏனைய நாடுகளில் இடைநிறுத்தப்பட்ட காவல்துறைக்கு பதவி இறக்கங்களும், தர நிலைகளை குறைத்தலும், குற்றம் செய்யவில்லை என நிரூபிக்கப்படும்வரை அவர்கள் கடமைக்கு திரும்புவதை தடுத்தலும்தான் இடம்பெற்று வருகிறது.
ஆனால் இலங்கையில் விசித்திரமாக, அந்த கொலை வழக்குடன் தொடர்புடைய தரப்புக்கு மீளவும் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதிலும் சட்ட, நீதி செயற்பாடுகளுக்கு அவமானகரமான விடயம் என்னவென்றால், அலெக்ஸ் கொலை வழக்கில் சந்தேகநபரான ஒரு உத்தியோகத்தருக்கு நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது மனித உரிமைகளை மதிக்காத ஒரு அப்பட்டமான செயற்பாடு. அவர் குற்றமற்றவர் என இன்னும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படவில்லை. அவர் உண்மையிலேயே குற்றமிழைத்து இருந்து, அத்தகைய ஒரு குற்ற மனம்படைத்த நபராக இருந்தால், ஒரு காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றபோது அலெக்ஸ் போன்று எத்தனை அலெக்ஸ்களை இவர்கள் உருவாக்குவார்கள்?
ஆகவே இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மீளவும் பணிக்கு நியமிக்கப்பட்டதையும், பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டாலே தவிர, அவர்களுக்கு எதிராக சாதாரண சட்டதிட்டங்களின் பிரகாரமும், காவல்துறைக்குறிய ஒழுங்கு விதிகளின் பிரகாரமும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருகிறோம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |