நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? எம். எம். மஹ்தி கேள்வி
நீதியைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரால், ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கை வரலாற்றில் காலம் காலமாக பல்வேறு திட்டமிட்ட அழிவுகளுக்கு அநியாயமாக முகம் கொடுத்து வருகின்ற முஸ்லிம் சமூகம் தமது பொருளாதாரத்தை, உயிர்களை, சொத்துக்களை இழந்து கொண்டே வருகின்றார்கள்.
அவ்வாறான இழப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் தலைமைகள், நாடாளுமன்ற பிரதிநிதிகள் நியாயமான நீதியையும் இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க தவறி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அண்மை காலங்களில் அம்பாறை கருத்தடை கொத்து, கண்டி- திகண பிரச்சினை, ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட பேரழிவுகள், வைத்தியர் சாபியினது சம்பவம் போன்றவற்றில் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயக் கலவரங்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றினர்.
அக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்குக்கு உரிய நீதியையும் அவற்றுக்கான இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது முடியாத போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கவனத்திற்கேனும் கொண்டு செல்ல வேண்டும் - என்றுள்ளது.