ஈ.பி.டி.பிக்கு நன்றியுடையவர்களாக யாழ் முஸ்லிம் மக்கள் இருக்க வேண்டும் : வேட்பாளர் சரபுல் அனாம் அழைப்பு!
ஈ.பி.டி.பிக்கு(epdp) யாழ். முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ். மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம், அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து வலுப்படுத்துவது அவசியம். அதற்காக யாழ் முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம்(26) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் விகிதாசாரம் என்பது மிகச் சொற்பமானது.
தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியதேவை
இவ்வாறான சூழலில் அரசியலானாலும் சரி வேறு எந்த விடையமானாலும் சரி நாம் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியதே எமது சூழலின் தேவையாக இருக்கின்றது.
எமது முஸ்லிம் சமூகத்தில் சிலர் ஊடகங்களில் தமது வாய்க்கு வந்தபடி வரலாற்றை சொல்ல முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக யாரென்றே தெரியாத சில கட்சிகள் 30 ஆண்டுகளாக எம்முடன் இருந்ததாக பொய் கூறுகின்றனர்.
உதவிக்கரம் நீட்டிய டக்ளஸ்
1990 களில் நாம் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சூழலில் டக்ளஸ்தேவானந்தாவை(douglas devananda) தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரும் எமக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.
குறிப்பாக அன்றைய சூழல் அவர்களை அதற்கான சூழ்நிலையையும் கொடுக்கவில்லை.
ஆனால் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படு புத்தளத்தில் தஞ்சம் புகுந்தபோது ஈ.பி.டி.பியே எனக்கு ஆதரவு கொடுத்தது.
புத்தளத்தில் காணி தந்து வீடு அமைத்து தந்து எம்மை வாழவைத்தது மடுமல்லாது தொழில் வாய்ப்புக்களும் தந்து எம்மினத்தை வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா.
எனவே வரவுள்ள தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை வெற்றிபெறச் செய்ய எமது முஸ்லிம் மக்கள் ஆதரவை வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
