அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறை!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறி ஆங் சாங் சூகி அரசாங்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்த நாட்டு இராணுவம் கவிழ்த்தது.
இதையடுத்து மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஆங் சாங் சூகி உள்ளிட்ட பலரை இராணுவம் வீட்டு காவலில் வைத்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளை சிறையில் அடைத்துள்ளனர்.
அதன் பின்னர், தேர்தலின் போது சட்ட விரோதமாக வாக்கி டோக்கி வாங்கியது, தேசத்துரோகம், இரகசிய சட்டத்தை மீறியது, சட்ட விரோதமாக தங்கம் பெற்றது மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது எனப் பல வழக்குகள் ஆங் சாங் சூகி மீது தொடரப்பட்டன.
இந்நிலையில் 76 வயதான ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
505(பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சாங் சூகி மியான்மரில் மக்கள் விடுதலைக்காக போராடியதற்காக ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.