நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று - பக்தர் இன்றி நடந்தேறியது
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை இடம்பெற்றது.
கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தவர்களுடன் நல்லூர் உற்சவம் உள்வீதியில் இடம்பெற்று வருகின் நிலையில், இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க காலை 7.00 மணியளவில் நல்லூர் முருகன் சிறியரக ரதத்தில் ஆலய உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
நல்லூர் தேர் திருவிழாவின் போது இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாக கலந்து கொள்கின்ற நிலையில், இம்முறை கொரோனா மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இணையவழியில் முருகனை தரிசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முன்னேற்பாடாக நல்லூர் ஆலய வெளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிசாரின் பேருந்து வண்டி ஒன்றும் வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டது. நல்லூர் ஆலய கொடியேற்றம் கடந்த ஒகஸ்ட் 13ஆம் திகதி இடம்பெற்றபோது பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.








