அனுராதபுர பேரணி உரையை நாடாளுமன்றில் ஆற்றவுள்ள நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அவர் ஆற்றவிருந்த சிறப்புரை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்தக் கைது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.
அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல
கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தின் கீழ்கூட இதுபோன்ற செயல்கள் நடந்திருந்தால், தான் அவற்றை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும், ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுராதபுர பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என்று சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் பரவிவரும் வதந்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறினார்.
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் விசேட உரை
"நாமல் ராஜபக்ச அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருவார். அன்று, அனுராதபுர மக்களுக்கு அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு வழங்குவார். அதைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்," என்று ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |