எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: அநுரவின் எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி
எங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வந்து கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு வழங்குவது ஒரே மேசையிலிருந்து காவல்துறை, சிஐடி மற்றும் நீதிமன்றங்களை இயக்குபவரைப் போல் தோன்றுவதாக நாமல் தெரிவித்துள்ளார்.
இது ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் மேடை
மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது மிக எளிது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய வழக்குகள் இருந்தால் அவை சட்டத்தின்படி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதைப் பற்றி அரசியல் மேடைகளில் கருத்துரைக்கக் கூடாது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் இருந்தால் சட்டம் தனது வழியில் செல்லட்டும் எங்கள் மீது எந்த விசாரணை நடந்தாலும் எந்தச் சட்டநடவடிக்கையும் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும் எங்கும் ஓடிப்போகும் எண்ணமோ தேவையோ எங்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அடுத்ததாக யார் கைது செய்யப்படுவார்கள் என்ற பேச்சில் ஜனாதிபதி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் நாமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள்
இலங்கை முழுவதும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுச் சுமையில் தத்தளித்து வருகின்றன எனவும் விலைகள் உயர்ந்து கொண்டே செல்கின்ற நிலையில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அடுத்ததாக யாரைக் கைவிலங்கில் காண விரும்புகிறார் என்பது அல்ல தங்கள் குடும்பத்தை எப்படிப் பேணுவது என்பதுதான் மக்களின் கவலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான ஆட்சியை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ளதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்கள் கணக்கெடுப்பும் பொறுப்பும் இன்றி செல்வம் குவித்துச் சொத்துகள் அமைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
கைது மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்துரையாளர் போல நடந்து கொள்ளாமல் சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் குறித்த மக்களின் அதிருப்தி ஆகியவற்றை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சாதாரண மக்கள் மீது விழுந்துள்ள பொருளாதார அழுத்தம், மற்றும் ஊழல், இரட்டை நிலைப்பாடுகள் குறித்து எழுந்துள்ள மக்களின் கோபம் ஆகியவற்றிற்கே ஜனாதிபதி பதில் அளிக்க வேண்டும் எனவும் இன்று நாட்டின் உண்மையான நெருக்கடி அதுவே எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 12 மணி நேரம் முன்