ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் சாட்டையடி!
வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்புக்கு ஜனாதிபதி அநுர திசாநாயக்க பொறுப்பேற்கத் தவறியதை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பதிவொன்றை வெளியிட்டுள்ள நாமல், தனது சொந்தக் கையால் செய்யப்பட்ட தவறுக்கு ஜனாதிபதி அரசாங்க அதிகாரிகளையோ அல்லது சிறைச்சாலைத் துறையையோ குறை கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஜனாதிபதி தனது கையொப்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதன்போது தெரிவித்துள்ளார்.
முழு நாட்டுக்கும் ஆபத்து
அவர் என்ன கையெழுத்திட்டார் என்பது அவருக்குப் புரியவில்லை என்றால், நிதி, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் உட்பட அது முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக நாமல் கூறியுள்ளார்.
நீதி அமைச்சகம் இந்தப் பட்டியலை அங்கீகரித்திருந்தாலும், கையெழுத்திடுவதற்கு முன்பு உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் வேலை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி விலக வலியுறுத்து
அத்தோடு, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் இருவரின் மௌனத்தையும் அவர் கண்டித்துள்ள நாமல் ராஜபக்ச, கீழ் மட்ட அதிகாரிகள் மீது பழியை மாற்ற முயற்சிப்பதாக அவர்களை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இதற்கு ஜனாதிபதி அல்லது அவரது செயலாளர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் யாராவது ஒருவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
