சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்
ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
1.454 மில்லியன் யூரோ இலஞ்சம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிமல் பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல்
நிமல் பெரேரா தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும், எனினும் அவர் வழங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரத்தில், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் கணக்கிலிருந்து தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
மேலும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து, அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் 160,400 யூரோ மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணைகளின்போது, நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளின்போது கிடைத்த மின்னஞ்சல்கள் மூலம் சந்தேகநபர் செயற்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த முதலாவது சந்தேகநபர்
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |