அரச சேவை தொடர்பில் நாமல் ராஜபக்ச பிரதமருக்கு கடிதம்
அரச சேவை
இலங்கையில் மிகவும் பயனுள்ள அரச சேவையை உருவாக்குவதற்கான யோசனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது யோசனை அடங்கிய கடிதம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமர்ப்பித்துள்ளார்.
பொதுத் துறையில் கள உத்தியோகத்தர்களாகப் பணிபுரிபவர்கள் 5 நாட்களும் வேலை செய்வதற்குப் பதிலாக வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வேலை செய்ய அனுமதித்தால் அதிக திறனுடன் பணியாற்ற முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமை
கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்கள் அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றுவதற்கு இயலுமைப்படுத்தப்பட்டால், அதன் மூலம் சிறந்த பொது சேவையை வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

