நீ கொன்ற எதிரி நான் தான் தோழா - நூல் வெளியீடு
அமெரெிக்க வாழ் ஈழ எழுத்தாளர் தியாவின் (இராசையா காண்டீபன்) நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம்(20) இடம்பெற்றது.
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முதல் நிகழ்வாக இந்த விழா இடம்பெற்றது.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.
இலக்கியம் சார்ந்த புதிய தலைமுறை

தமிழர் உரிமை மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இளைய தலைமுறையினரை இலக்கிய வழியில் ஊக்கப்படுத்தவும் தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை அமைப்பு உருவாக்கப்படுவதாக தலைமை உரையாற்றிய தீபச்செல்வன் தெரிவித்தார்.
2009இற்கு முந்தைய காலத்தில் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் இளையவர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை இலக்கிய அமைப்புகள் மற்றும் போராளிப் படைப்பாளிகள் பெரும் ஊக்குவிப்பை வழங்கியதாகவும் இன்று இலக்கியம் சார்ந்து புதிய தலைமுறையை வழிநடத்த அந்த தலைமைத்துவம் இல்லாத நிலையில் சிலர் தவறாக வழிநடத்த முனைவதாகவும் இதன்போது தீபச்செல்வன் குறிப்பிட்டார்.

வரவேற்புரையை யாழ். பல்பகலைக்கழக மாணவன் கி. அலக்ஷன் வழங்க வாழ்த்துரைகளை முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ. வேழமாலிகிதன், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் ஆகியோர் வழங்கினர்.
புத்தகம் குறித்த விமர்சன உரைகளை விமர்சகர் செந்தூரனும், ஆசிரிய ஆலோசகர் எஸ். லோகேஸ்வரனும் நிகழ்த்த ஏற்புரையை யாழ். பல்பகலைக்கழக மாணவன் லம்போ கண்ணதாசனும் நன்றியுரையை எழுத்தாளர் குரு சதாசிவமும் வழங்கினர்.

