துபாயிலிருந்து திட்டமிடப்பட்டதா...? நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தத்தில் நனைத்த மாபெரும் மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் செயல்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்குக் காரணமான வன்முறை மோதலின் பின்னணி தற்போது விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சாதாரண கைதிகளுக்கிடையேயான மோதல் அல்ல துபாயில் இருந்து இயங்குவதாகக் கூறப்படும் டூம் மற்றும் அடா என்ற இரண்டு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறைச் சம்பவத்தில் 25 கைதிகள் உயிரிழந்ததுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, டூம் என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரின் தந்தையையும் உள்ளடக்கிய சிலர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் கசிவால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் அடா மற்றும் டூம் தரப்பினருடன் தொடர்புடைய கைதிகள், தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் கைதிகள் மீது கூட்டாக தாக்குதல் நடத்தியதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மற்றும் வெட்டும் தன்மையுள்ள ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை புலனாய்வு பிரிவு உடனடியாக தலையிட்டதுடன் வெளிப்புற பாதுகாப்பிற்காக நீர்கொழும்பு காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் (STF) அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கலவரத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலைக்குள்ளான கைதிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பலர் நீர்கொழும்பு சிறைச்சாலை முன்பு திரண்டு, தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் திடீர் கோபத்தின் விளைவாக அல்ல முன்கூட்டியே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தையடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்த விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சிறைச்சாலைக்குள் நிலவும் அமைதியின்மையை அதிகாரிகளால் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி சிறைச்சாலைக்குள் நடைபெற்றதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய தகவல் வெளியானதே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் நடைபெற்ற தாக்குதலுக்கு தற்போது சிறையில் உள்ளதாகக் கூறப்படும் கடுவல்லேகொட சுரேஷ் என்ற அமைப்புசார்ந்த குற்றவாளியே தலைமை தாங்கியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அவர், டொன்கி மூனா என அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் தனக்கென ஒரு செல்வாக்கும் கட்டுப்பாட்டும் உருவாக்கி பிற கைதிகள் மீது பல்வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவரது நடவடிக்கைகள் குறித்து சில சிறைச்சாலை அதிகாரிகள் ரகசிய தகவல்களை மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து வழங்கியிருந்ததாகவும் அதனால் பல தரப்பினரிடையே கடுமையான விரோதமும் பதற்றமும் உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற அன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருந்தது அதில் சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு தற்காலிகமாக சமரசப்படுத்தியிருந்தனர்.
எனினும் மதிய உணவுக்குப் பிறகு மோதல் மீண்டும் வெடித்து, இரும்புக் கம்பிகள், கற்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி கைதிகள் எதிர்தரப்பினரை கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலின் தீவிரம் அதிகரித்ததால் சிறைச்சாலை நிர்வாகத்தினராலும் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளாலும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதன் மத்தியில் பெண்கள் பிரிவில் இருந்த சில கைதிகள், சுரேஷுக்கு ஆதரவாக சிறைச்சாலையின் கூரையில் ஏறி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் ஆண் கைதிகளும் கூரையில் ஏறி தனிப் போராட்டத்தை முன்னெடுத்ததால் நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள், தற்போதைய சிறைச்சாலை அமைப்புக்குள் பாதாள உலகக் கும்பல்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் தங்களது வலையமைப்புகளை சுதந்திரமாக இயக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகின்றன.
சிறைச்சாலை போன்ற பாதுகாப்பான இடத்தில்கூட ஒரு கைதி இவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் பெற அனுமதிக்கப்பட்டதற்கு சிறைச்சாலை நிர்வாகமும் பொறுப்பான அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கடுமையான விமர்சனங்கள் சமூகத்தில் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்தின் விளைவாக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன இந்த வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களின் பிரதான சந்தேக நபராகக் கூறப்படும் கடுவல்லேகொட சுரேஷுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தீவிரமான நிலைமையை கருத்தில் கொண்டு சிறைச்சாலை அமைப்பை முழுமையாகச் சீரமைத்து பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க தற்போதைய அரசு எதிர்காலத்தில் கடுமையான மற்றும் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைச்சாலைக்குள் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் எவ்வாறு சென்றன ? இந்த கலவரத்தின் போது இரண்டு கைதிகள் எவ்வாறு தப்பிச்சென்றனர் என்பது குறித்து கேள்வி எழுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |