எந்தவொரு தரப்பும் எமக்கு உதவி செய்ய மாட்டார்கள் : முன்னாள் அரசதலைவர்
நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச தரப்புக்கள் உதவும் எனவும், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் எமக்கு உதவ மாட்டார்கள் என முன்னாள் அரசதலைவர் மைத்திரபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தொகுதி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் நாட்டின் அரச இயந்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே உதவிகளை வழங்கும். மனித உரிமை விவகாரங்கள், ஜனநாயகம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, காவல்துறை திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை போன்ற காரணிகள் குறித்து அவதானிக்கப்படும்.
கடந்த காலங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் தற்பொழுது தள்ளுடி செய்யப்படுகின்றது. நாம் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றோம். இன்று எம்மை பாதுகாப்பதற்கு எவரும் முன்வரவில்லை.ஊழல் மோசடிகள், வீண் விரயம் மிகவும் அதிகரித்துள்ளது.
அதிகாரம் ஒரு சிலருக்கு இடையில் மட்டும் பகிரப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டால் எந்தவொரு தரப்பும் எமக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என தெரிவித்துள்ளார்.