பிரிவினைவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமில்லை - கமல் குணரத்ன
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne).
“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், அரச தலைவரது ஊடக மையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால், இலங்கையர் எவரும் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை.
சுதந்திரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கேள்விக்குறியாகியது. கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் கூட உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இன்று ஒரே பலமான வலையமைப்பாகச் செயற்படுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளோம்.
ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கல் அல்ல. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பல வருடங்களாகப் பெற்றுக்கொண்ட தமது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைபுரிவது ஒரு தவறான விடயமாக அமையாது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இராணுவத்தினரின் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.