தீவகப் பகுதிகளை இழக்க வேண்டிய நிலை - தமிழ் தேசியம் பேசுவோரும் துணையாம்
யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தையும் விட மிகவும் மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றும் இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியம் பேசுவோரும் துணை போகின்றனர் என முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்..
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கை
மேலும் தெரிவித்துள்ள அவர், “கடந்த ஒரு வருடமாக தீவகம் முழுவதையும், ஒரு அதிகார சபைக்குள் கொண்டு வந்து, தீவகத்திலிருக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்வதற்குரிய வகையில அரசாங்கத்தின் திட்டம் அமைந்துள்ளது.
அண்மையில் ரணில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போதே ஒரு சில புத்தி ஜீவிகளைக்கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டம் மகாவலியை விடவும் மிக மோசமான முறையில் அமைந்திருக்கும்.
முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் அமைவதோடு, அனைத்து செயற்பாடுகளும் கொழும்பில் இருந்தே கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக செயற்படும் தமிழத் தரப்புக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
தீவகத்தை இழக்க வேண்டிய நிலை

அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியம் பேசும், தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுக்கும் நன்றாகவே தெரிந்தும் அனைத்தையும் மூடி மறைத்து தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு வெள்ளையடிக்கும் மிக மோசமான செயற்பாட்டிற்கும் தீவகத்தை முற்று முழுதாக இழக்க வேண்டிய ஒரு நிலைக்கும் இவர்கள் துணை போகின்றனர்” - என்றார்.
இதேவேளை, 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மற்றுமொரு சந்திப்பிற்கு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பிலுள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு அழைப்பது வடக்கு கிழக்கு ஈழத் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கை என சாடியுள்ளார்.